Tuesday, 9 August 2016

சோலார் பம்பு செட்

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!-விவசாயிகளுக்கு தெரிய படுத்துங்கள் நண்பர்களே!!!

சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.

ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.
தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.

கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622

Thursday, 4 August 2016

நாட்டுப் பசு காளை

நாட்டு மாடுகள்:

அழிக்க நினைப்பவர்களை விட நமக்கு வலிமை அதிகம்!

ஜல்லிக்கட்டு தடைக்கும் காளைகளின் அழிவுக்குமான உறவை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, மாட்டு வேடிக்கை போன்ற விழாக்கள் மட்டுமே  காளைகளை வளர்ப்பதற்கான தேவைகளாக உள்ளன. இவ்விழாக்கள் தடுக்கப்பட்ட நிலையில் காளைகளை வளர்ப்பது ‘தேவையற்ற செயல்’ என்ற நிலை உருவாகியுள்ளது. ஏர் உழவும், மாட்டு வண்டிகளும் அரிதாகிக்கொண்டுள்ளதால் காளைக் கன்றுகளைக் கறி வெட்டுக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகிவிட்டது.

காரணங்களைக் கடந்தும் ஓர் உயிரினத்தைப் பாதுகாக்க நினைப்பதுதான் உண்மையான அன்பு. காளைகளால் எந்தப் ‘பயனும்’ இல்லை என்ற எண்ணமே பாவம். இவ்வாறு, எந்தப் பலனும் எதிர்பாராமல் காளைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ண கொண்டோரிடம் சில வழிகாட்டுதல்களை முன் வைக்க விரும்புகிறேன்.

1. நாட்டு மாடுகளின் வகை இனப் பெயர்களை முதன்மைப்படுத்துவதை நிறுத்துங்கள். மாட்டு வகையினத்தைக் குறிப்பிடுங்கள். அவ்வகையின் சிறப்புகளைப் பற்றி விவரிக்காதீர்கள். மாட்டு வகைகளைப் பற்றி அதிகமாகப் பேசியும் எழுதியும் அவற்றின் சந்தை மதிப்பு நியாயமற்ற வகையில் அதிகரித்துவிட்டது. மாடுகளின் வகையினம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வகைகளின் சிறப்புகளை, தனித்தன்மைகளைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதேவேளை, அவ்வினங்களின் சிறப்புகளைச் சந்தை மதிப்பிற்காக உயர்த்தும் வழக்கம் ஒழிய வேண்டும்.

காங்கேயம் காளைகளை இப்போது பணக்காரர்கள் மட்டுமே வாங்க இயலும். இதன் காரணம், காங்கேயம் காளைகளின் ’பெருமைகளை’ அளவுக்கதிகமாகப் பரப்பியதுதான். இதே நிலை மற்ற நாட்டு மாடுகளுக்கும் உருவாகாமல் பார்த்துக்கொள்வது உடனடித் தேவை. எல்லா நாட்டு மாட்டினங்களும் சிறப்பானவைதான். ஒவ்வொரு வகையினமும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டது. இனப் பெயர் என்பது அடையாளத்திற்கானதுதானே தவிர, சந்தை மதிப்பை அதிகரிக்கச் செய்வதற்கானதல்ல.

2. நாட்டு மாடுகளின் பாலில் உள்ள சத்துகளை கொண்டு அவற்றைத் தரம் பிரிக்கும் செயல் மிகப் பெரிய சூதாட்டத்திற்கான முன்னோட்டம். நாட்டுப் பசுக்களின் விலையை மிக அதிகமாக உயர்த்தவும், நாட்டுப் பசும்பாலை ஏற்றுமதி செய்யவும் இம்மாதிரியான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இந்த நிலைமையை அனுமதித்தால் இன்னும் சில காலத்தில் நாட்டுப் பசும்பால் பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிடும். ஏற்கெனவே மாநகரங்களில் இந்த நிலை உருவாகிக்கொண்டுள்ளது.

3. வீதிகளில் திரியும் நாட்டுக் காளைக் கன்றுகளை வாங்கி, உங்கள் பண்ணைகளில் வளர்க்கத் துவங்குங்கள். அக்கன்றுகள் எந்த வகையைச் சேர்ந்தவையாக இருந்தாலும் பரவாயில்லை.

4. வேளாண்மை செய்வோர், பண்ணைகள் வைத்திருப்போர் காளைகளைப் பாதுகாப்பதற்கென்று தனி அக்கறை செலுத்துங்கள். உங்களால் இயன்ற அளவுக்குக் காளைகளைப் பராமரிக்க முன்வாருங்கள். இவ்வாறான செயல்பாட்டினால், நாட்டுப் பசுக்களுக்குப் புணர்ச்சி இணை கிடைப்பது எளிதாகும். காளைகளைப் பராமரிப்பதனால் என்ன பலன் எனச் சிந்திப்போர் இப்பணியிலிருந்து விலகிவிடுவது நல்லது. ஏனெனில், இது ஓர் உயிரின வகை அழியாமல் காக்கும் பணி. வணிக நோக்கங்கள் இல்லாதவர்கள்தான் இப்பணியை நேர்மையாகச் செய்வார்கள்.

5. காளைகளைப் பராமரிப்பதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. கன்றுக் குட்டிகளாக வாங்கி, அவற்றுடன் நன்கு பழகுவது அடிப்படையானது. பழகுவோரிடம் மட்டுமே காளைகள் இணக்கமாக இருக்கும். மூக்கணாங்கயிறு போடுவது போன்ற கட்டுப்பாட்டுச் செயல்களை அனுபவம் மிக்கோருடன் சேர்ந்து செய்ய வேண்டும். காளைகளுக்கான தீவனத்திலும் அக்கறை காட்ட வேண்டும். மரபுவழிப்பட்ட தீவனங்களைப் பண்ணையத்திலேயே வளர்ப்பதுதான் சரியான செயல். அவற்றைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள்.

6. உங்களிடம் நிலம் இல்லை; ஆனால் காளைக் காப்புப் பணியில் ஈடுபடும் விருப்பம் உள்ளது என்றால், நன்கு தெரிந்த பண்ணையங்களுக்குக் காளைகளை வாங்கித் தாருங்கள். அவற்றின் பராமரிப்புகளுக்கான ஒத்துழைப்புகளைச் செய்யுங்கள்.

7. கிராமக் கோயில்களுக்கென காளைகளை வளர்க்கும் வழக்கம் இப்போதும் உள்ளது. இவ்வழக்கம் சரியாகக் கடைபிடிக்கப்படும் கிராமக் கோயில்களுக்குக் காளைகளை வாங்கித் தருவதும் சிறந்த செயலாகும். கோயில் காளைகள் வழியாகத்தான் பெருமளவு நாட்டு மாடுகள் காக்கப்பட்டு வருகின்றன.

8. ஜல்லிக்கட்டு தடைக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் பின்னால் பன்னாட்டு வலைப்பின்னல் உள்ளது. கோக் நிறுவனம் இப்போது, பால் வணிகத்திற்குள் நுழைந்துள்ளது. இன்னும் பலர் வருவார்கள்.

9. நாட்டுப் பசுக்களை அழிப்பது பெருநிறுவனங்களின் நோக்கம் அல்ல. அவற்றை எல்லாம் தமது நிறுவனங்களின் காப்புரிமைச் சொத்துகளாகவும், தமது பண்ணை உடைமைகளாகவும் வைத்துக்கொள்வதுதான் எல்லாப் பெருநிறுவனங்களின் கனவு. ஜல்லிக்கட்டுத் தடைக்கான அமைப்புகள் கோக், ஆரோக்யா போன்ற பெரு நிறுவன பண்ணைகளுக்குள் நுழைந்து அங்கு நிகழும் விதிமீறல்களைப் படம் பிடித்ததாகப் பதிவுகள் இல்லை. கிராமங்களில் நிகழும் மாட்டு வேடிக்கைகளைப் படம் பிடித்து ஊடகங்களில் ஊளையிடுவது அவர்கள் வழக்கம்.

10. தீமைகளுடன் போராடுவதைக் காட்டிலும் நன்மைகளை வளர்ப்பதுதான் சரியானது என்று புரிந்துகொண்டவன் நான். நெருப்பு தணிய வேண்டுமெனில் நீர் மிக வேண்டும். காளைகளைப் பாதுகாப்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அல்லது அரசியல் அமைப்புகளின் கடமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். இது நம் அனைவருக்குமான பொறுப்பு. ஜல்லிக்கட்டு போன்ற காளை விளையாட்டுகளின் மரபுவழி உரிமைகளை மீட்பது சரியானதுதான். அதேவேளை,  காளைகளையும் பசுக்களையும் பாதுகாப்பதற்கு நம்மாலான வேலைகளைச் செய்வது இன்றியமையாதது.

11. காளைக் காப்பகங்களை உருவாக்க முன்வாருங்கள்.

12. பால் பயன்பாட்டினை வரையறுத்து வாழுங்கள். அளவுக்கதிகமான பால் பயன்பாடுதான் இந்த எல்லாச் சீர்கேடுகளுக்கும் மூலகாரணம். தனியார் பால் பொருட்களை நிராகரிக்கத் துவங்குங்கள். தனியார் மூலதனம் பால் சந்தையில் குவிந்த பின்னர்தான் நாட்டு மாடுகள் அழியும் நிலை உருவானது.

மேற்கண்ட செயல்களில் நீங்களே நேரடியாக ஈடுபட முடியும். எல்லாச் சிக்கல்களுக்குமான தீர்வுகள் உங்களிடம் உள்ளன. காளைகளையும் பசுக்களையும் காக்க வேண்டும் என்ற உங்கள் அன்பும் அக்கறையும் உணர்ச்சி வெளிப்பாடுகளாக மட்டும் இருந்துவிட வேண்டாம். அவை செயல் வடிவம் பெற வேண்டும்.

இது நமக்கான பூமி. நம்மைச் சுற்றிலும் வாழும் உயிர்கள் நம்மோடு இணைந்து வாழும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. எல்லா உயிர்களையும் காக்கும் பொறுப்பும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. நமது வாழ்க்கையில் செய்யும் சின்னஞ்சிறிய மாற்றங்கள், புவிச் சூழலில் பெரிய முன்னேற்றங்களை நிகழ்த்தவல்லவை என்பதை மனதில் கொள்ளுங்கள்.